மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள வால்கான் பகுதியில் உள்ள மின்சார துணை மின்நிலையத்தில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கடும் கோபமடைந்த இரண்டு இளைஞர்கள், மின் நிலையத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி மேஜை மீது தீவைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அங்கு பணியாற்றி வந்த ஆபரேட்டரையும் தாக்க முயற்சி செய்தர். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் ரேவாசா கிராமத்தில் முழுமையான மின்வெட்டு ஏற்பட்டிருந்த நிலையில், கிராம மக்கள் பலமுறை மின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அதிகாரிகளின் மொபைல் போன்கள் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மின் துணை மையத்திற்குச் சென்றனர். ஆனால் அங்கும் தெளிவான விளக்கம் வழங்கப்படாததால், சில இளைஞர்கள் கோபத்தில் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அலமாரிகள், மேசைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், இரண்டு இளைஞர்கள் பெட்ரோலை மேஜையில் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது.  இது குறித்து வால்கான் போலீசார், அடையாளம் தெரியாத இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.