நியூயார்க் நகரில் உள்ள பிரபல சென்ட்ரல் பார்க் பெஞ்ச் ஒன்றில், நேர்த்தியாக உடையணிந்த ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, அந்த அவர்கள் வழக்கறிஞர்கள் என்று வதந்திகள் பரவினாலும், அவர்களின் உண்மையான அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

டிக்டாக் கிரியேட்டரான ஜே குவாபோ என்பவரால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கிளிப்பில், அந்த ஜோடி அன்பாக அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது, “ஒரு ரூமுக்குப் போய் பண்ணுங்க, சுத்திப் பிள்ளைகள் இருக்காங்க” என்று அவர் குறுக்கிட்டு கத்துகிறார். இந்த திடீர் செயலால் அதிர்ச்சியடைந்த அந்த ஜோடி, உடனடியாக முத்தமிடுவதை நிறுத்திவிட்டு கேமராவில் இருந்து தங்களை மறைக்க முயன்றனர். கார்ப்பரேட் கோட் சூட்டில் இருந்த அந்த நபர் சிரித்தபடியே எழுந்து நின்று டிக்டாக் கலைஞரை கையை ஆட்டிப் போகச் சொல்ல, அந்தப் பெண்ணோ அமைதியாக அமர்ந்து “போனைக் கீழே வைங்க” என்று எச்சரிக்கிறார்.

 

இந்தச் சந்திப்பு தொடர்ந்தபோது, பிராங்க் மற்றும் கன்ஃபிரன்டேஷன் வீடியோக்களை வெளியிடுவதில் அறியப்பட்ட அந்த டிக்டாக் கிரியேட்டர், “என்னைத் தொடாதீர்கள், நீங்கள் தொட்டால் நானும் தொட வேண்டியிருக்கும்” என்று கூறியபடியே தொடர்ந்து அவர்களைப் படம் பிடித்தார். கடந்த ஆண்டு கோல்ட்ப்ளே கச்சேரி ஒன்றின் கிஸ் கேமில் சிக்கிப் பிறகு கள்ளத்தொடர்பு வதந்திகளால் வைரலான ஜோடியின் சம்பவத்துடன் நெட்டிசன்கள் தற்போது இந்த நிகழ்வையும் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இருப்பினும், இந்தச் சென்ட்ரல் பார்க் ஜோடிக்கு இடையில் கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை என்பதோடு, அவர்களில் யாருக்கு திருமணமாகியுள்ளது என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வீடியோவை பலரும் கிண்டல் செய்தாலும், பொதுவெளியில் முத்தமிட்டவர்களை விட அனுமதியின்றி அவர்களை ரகசியமாகப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றிய நபரையே பல சமூக வலைதள பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “தெரியாத நபர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் போடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று ஒரு பயனர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவெளியில் தனிநபர் அந்தரங்கம் மற்றும் மக்களின் சம்மதமின்றி வீடியோக்களை வைரலாக்கும் போக்கு குறித்து இந்தச் சம்பவம் இன்டர்நெட்டில் மீண்டும் ஒரு தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.