
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 123 போட்டிகள் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9230 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நான் மட்டும் இருந்திருந்தால் அவரை இவ்வளவு விரைவாக ஓய்வு பெற்றிருக்க விட்டிருக்க மாட்டேன் என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அவர் ஒரு தனித்துவமான திறமை கொண்ட வீரர். அவரிடம் உள்ள நேர்மை, ஒழுக்கம் மற்றும் உழைப்பு என அனைத்தையும் பார்த்து தான் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்தேன்.
முதல் முறையாக நான் அவரை இந்திய அணிக்காக தேர்வு செய்த போது பலரும் அந்தத் தேர்வை சந்தேகமாக பார்த்தனர். ஆனால் இத்தனை ஆண்டு காலம் அவர் செய்ததெல்லாம் வரலாறு. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்திய அணியின் அடுத்த கட்ட நகர்விற்கும் காரணமாக இருந்துள்ளார். நான் மட்டும் தற்போது தலைவராக இருந்திருந்தால் அவரை இவ்வளவு விரைவாக ஓய்வு பெற்றிருக்க விடமாட்டேன்.
மேலும் அவருக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கி இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்திருப்பேன். அதோடு இந்திய அணியில் நீங்கள் கேப்டனாக இருந்த போது மிகச் சிறப்பான நிலையில் இருந்தது. தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் பழைய மாதிரி டெஸ்ட் அணியை கொண்டு வந்து விட்டு பின்னர் ஓய்வு பெறுங்கள் என்று கூறி தொடர்ந்து விளையாட வைத்திருப்பேன் என்று கூறினார்.