மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், தொடர்ந்து புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், ராஜாவின் சகோதரர் விபின் ரகுவன்ஷி அளித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கூற்றுப்படி, ராஜாவுக்கு மலையேற்றம் மற்றும் பயணங்கள் மீது இருந்த ஆர்வத்தை சோனம் தனது நலனுக்காக உபயோகித்தார் என கூறினார்.

மேலும் ராஜாவின் விருப்பங்களை அறிந்த சோனம், அதையே ஆயுதமாக்கி ராஜாவை அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்குச் சேர்ந்து தனது காதலன் மற்றும் மற்ற 3 பேருடன் கூட்டு சதியில் ஈடுபட்டு ராஜாவைக் கொலை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு முன்னரே சோனம், ராஜாவுடன் திருமண ஷாப்பிங்கில் இருந்தபோதும், ராஜ் குஷ்வாஹாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்,  காமாக்யா கோவிலுக்கு சென்றபோது, சோனம், ராஜாவுடன் புகைப்படம் எடுக்க மறுத்ததாகவும், அந்த சமயத்திலேயே அவர் ராஜாவிடம் மனஅழுத்தம் ஏற்படுத்தி தன் திட்டத்தை நிறைவேற்றத் திட்டமிட்டதாகவும் விபின் தெரிவிக்கிறார்.

கடந்த மே 13 ஆம் தேதி சோனமும், ராஜும் இடையே நடந்த இணையதள உரையாடலில், “நான் இறந்துவிடுவேன் அல்லது நீ அவனைக் கொல்ல வேண்டும்” என்ற சாட் உள்ளதாகவும், அதற்கு பதிலளித்த ராஜ் “நான் அதைச் செய்வேன்” என ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மேகாலயா போலீசின் சிறப்பு விசாரணை குழு (SIT) சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹாவை தனித்தனியாக விசாரித்து வருகிறது. இருவரும் தங்கள் குற்றங்களை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கிடையே நேருக்கு நேர் விசாரணை விரைவில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷில்லாங்கின் கிழக்கு பகுதி DIG மார்க்கின் கூறுகையில், “சோனம் பலமுறை உணர்ச்சிவசப்பட்டு நாடகம் ஆடுகிறார். பல தகவல்களைத் தவறாக வழங்குகிறார். எல்லாப் பழியையும் ராஜ் குஷ்வாஹா மீது சுமத்த முயல்கிறார்,” என தெரிவித்தார். SIT தற்போது 25 முக்கியமான கேள்விகளுடன் இருவரையும் நேரில் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது.