போலந்து நாட்டிற்குள் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சோவியத் ராணுவம் நாட்டிற்குள் முன்னேறி வந்தது. அப்போது கிளாஸேவ்ஸ்கி என்பவரது குடும்பம் அவர்களுடைய வெள்ளி பொருட்களை கிழக்கு போலந்தில் உள்ள அவர்களது தோட்டத்தில் முழங்கால் அளவுள்ள குழியில் புதைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்களின் குடும்பத்தில் உள்ள நான்கு மகன்களும் போலந்தில் இருந்து வெளியேறி உள்ளனர். ஆனால் தந்தையான ஆதாம் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். அதன் பிறகு ஆதாமை அவருடைய மகன்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இதனையடுத்து நான்கு மகன்களில் ஒருவரான குஸ்டான் என்பவரின் மகனான ஜான் கிளாஸேவ்ஸ்கி தனது தந்தையிடமிருந்து வெள்ளிப் பொருட்களை புதைத்து வைத்த வரைபடத்தை 1989 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் குடும்பத்தின் வெள்ளி பொருட்களை கண்டுபிடிப்பதற்கான தேடலில் இறங்கினார். அப்போது அவர் தனது பழைய வீட்டை சென்று பார்த்துள்ளார். அங்கு வெறும் பாதாள அறை மட்டுமே மிஞ்சி இருந்ததை கண்டு மிகவும் மனமுடைந்தார். ஆனால் அவர் முயற்சியை கைவிடாமல் பள்ளி முதல்வர் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் 2019 ஆம் ஆண்டு தேடுதலை தீவிரபடுத்தியுள்ளார். இந்த நிலையில் தீவிர தேடுதலுக்குப் பிறகு 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குடும்ப வெள்ளி புதையலை அவர் கண்டுபிடித்துள்ளார். இந்த புதையலில் வெள்ளி மெழுகுவர்த்திகள், குத்துவிளக்குகள், ட்ரிங்கெட்டுகள், நாணயங்கள், பதக்கங்கள், பால்குடங்கள், செவ்வந்திகள், குவளைகள், வேட்டை துப்பாக்கிகள், தங்க சிலுவைகள் ஆகிய பொருட்கள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.