தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக என்னுடைய அப்பா கேரண்டி கொடுத்து கடன் வாங்கி கொடுத்தார். என்னுடைய அப்பா இறந்த பிறகு அந்த கடன் சுமை எல்லாம் என் அம்மாவின் மீது விழுந்தது. எங்களுக்கு இருந்த ஒரே ஒரு பிளாட்டையும் விற்று யாரோ வாங்கிய கடனை என்னுடைய அம்மா செலுத்தினார்.

மிகவும் கடினமான சூழலிலும் கூட எங்களை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததோடு எந்த குறையும் இல்லாமல் எங்களை பார்த்துக் கொண்டனர். என்னுடைய அண்ணன்கள் இருவரும் படிப்பு முடிந்து வேலையில் சேரப் போகிறார்கள் என்று என்னுடைய அம்மா மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் அவர்கள் இருவருமே ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். இதனால் மிகவும் மனமுடைந்த என்னுடைய அம்மா அந்த சமயத்திலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. நான் தொழில் ரீதியாக எத்தனையோ ஏற்ற தாழ்வுகளை சந்தித்தாலும் தன்னம்பிக்கையுடன் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை என் அம்மாவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். மேலும் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக் கூடாது என்பதை என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.