
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தை இழந்தது. இதனால் ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை இழந்த அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பையும் இழந்துவிட்டது.
இந்நிலையில் கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இடையே மோதல் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. அணியின் தற்போதைய செயல்பாடுகளை குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் கூடிய ஆலோசனை நடத்தினர். அதில் இனி போட்டிகள் நடைபெறும் போது, வீரர்களின் மனைவி, தோழி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வருவதை தடை செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்த அனுமதிகளுக்கு தடை விதிக்கலாம் என்று பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு கிரிக்கெட் தொடர் 45 நாட்களை கடந்து இருக்கிறது என்றால், மனைவி குடும்பத்துடன் அந்த வீரர் 14 நாட்கள் மட்டுமே தங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் சிறிய கால கிரிக்கெட் தொடர் என்றால் வெறும் 7 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு ஒரு தொடருக்காக செல்லும்போது வீரர் ஒன்றாகவே செல்ல வேண்டும், அணி வீரர்கள் சென்ற பிறகு தனியாக வந்து அணியில் இணைந்து கொள்ளக்கூடாது என்ற முடிவும் பிசிசிஐ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.