கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் நீர் வளங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. குடிநீரை தேவைக்கு தவிர பிற பயன்பாடுகளுக்கு உபயோகித்தால் ரூபாய் 5000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. குடிநீரை வீணாக்கும் நபர்களை பார்த்தால் 1916 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மக்கள் தொகை 1.40 கோடியாக அதிகரித்துள்ளதால் அனைவருக்கும் குடிநீர் வழங்குதல் அவசியமாகிவிட்டது. வரப்போகும் கோடை காலத்தில் வெப்பநிலை மற்றும் குறைந்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பொதுமக்கள் கருத்தில் கொண்டு குடிநீரை வாகனங்கள் சுத்தம் செய்ய, தோட்ட பசுமை பராமரிப்பு, கட்டுமானப் பணிகள், நீரூற்று, மால்கள், திரையரங்குகள், சாலைகள் மற்றும் பிற சுத்திகரிப்பு பணிகளில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

நீர் வளங்கள் மற்றும் கழிவு நீர் வாரிய சட்டம் 1964ன் 109 ஆவது பிரிவின்படி, குடிநீரை வீணாக்கினால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறினால் தினசரி கூடுதல் ரூபாய் 500 வசூலிக்கப்படும். இதற்கு முன்னதாகவே துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் கட்டண உயர்வு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீரை தேவைக்கேற்ப பயன்படுத்த பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீணாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.