தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘கலேஜா’ திரைப்படம், மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த ரீ-ரிலீஸை முன்னிட்டு, விஜயவாடா நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பாம்புடன் ஒரு ரசிகர் நுழைந்த காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கலேஜா’ படத்தில் மகேஷ் பாபு பாலைவனத்தில் போலி பாம்பை வீசும் பிரபலமான காட்சியை உண்மையில் நடிக்க விரும்பி, அந்த ரசிகர் திரையரங்கிற்குள் உண்மையான பாம்புடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.

 

ஆரம்பத்தில், பார்வையாளர்கள் பாம்பு போலியானது என நினைத்தனர். ஆனால் அது நகரத் தொடங்கியதும் குழப்பம் நிலவியது. அந்த ரசிகர் தனது முகத்தை வெள்ளை துணியால் மூடி, மகேஷ் பாபுவின் கதாபாத்திரத்தை போல நடித்து பாம்புடன் நடனமாடிய காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் திரையரங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மேலும், படத்தின் சில முக்கிய காட்சிகள் திரையில் திரையிடப்படவில்லை என்ற காரணத்தால் சில ரசிகர்கள் தியேட்டரில் கோபம் அடைந்து அலப்பறை செய்தனர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கின் பொருட்களை சேதப்படுத்தி, ஊழியர்களுடன் சண்டையிலும் ஈடுபட்டனர்.