
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பிரபல நடிகர் ஷாருக்கானின் பங்களா உள்ளது. இந்த பங்களா ஷாருக்கானின் மனைவி கௌரிக்கான் பெயரில் உள்ள பங்களாவாகும். ஆனால் இந்த பங்களா கட்டப்பட்டிருக்கும் நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. 2,446 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வீட்டை ஷாருக்கானுக்கு முன் வைத்திருந்த உரிமையாளருக்கு மாநில அரசு இந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தது. இந்த பங்களாவை அதன் உரிமையாளர் நடிகர் ஷாருக்கானுக்கு விற்பனை செய்துள்ளார்.
மேலும் மாநில அரசின் ஒரு புதிய திட்டத்தின் கீழ் குத்தகைக்கு இருந்த நிலத்தை குறிப்பிட்ட பணம் கொடுத்து ஷாருக்கான் சொந்தமாக்கியுள்ளார். குத்தகை நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள அரசிடம் ஷாருக்கான் கொடுத்த விண்ணப்பத்தின்படி நில அளவை அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து அதன் மதிப்பு ரூபாய் 27.50 கோடி செலுத்தும் படி ஷாருக்கான் இடம் கூறியுள்ளனர். அதன்படி பணத்தை செலுத்தி நிலத்தை தனது மனைவி பெயருக்கு ஷாருக்கான் மாற்றி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாருக்கான் அந்த நிலத்தை மதிப்பீடு செய்ததில் அதிகாரிகள் தவறு செய்திருப்பதை கண்டறிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இந்த மனுவில் அதிகாரிகள் தவறிழைத்ததாகவும் தான் கூடுதலாக நிலத்திற்கு ரூபாய் 9 கோடி செலுத்தி உள்ளதாகவும் அதனை திருப்பி தருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை மாநில அரசின் ஒப்புதலுக்காக மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார். இந்த மனுவை ஏற்ற அதிகாரிகள் மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பின் ஷாருக்கானுக்கு 9 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.