
சமீபத்தில் ஊழியர் ஒருவர், முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனது விடுமுறை நாளில் வேலை செய்யும் வகையில் மேலாளர் அழுத்தம் கொடுத்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, வேலைக்கான எல்லைகள், ஊழியரின் உரிமைகள் குறித்து மீண்டும் ஒரு முறை விவாதங்களை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பணியிடம் நிபுணர் பென் அஸ்கின்ஸ், இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பெயர்கள் மங்கலாக்கப்பட்டிருந்தாலும், சமூக ஊடக பயனாளர்கள் அந்த மேலாளரின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இச்சம்பவத்தில், ஒரு பெண் ஊழியர் தனது விடுமுறை நாளில் வீட்டில் குழந்தைகளுடன் இருந்த நிலையில், “ஜாஸ்பர் வரமாட்டார், நீங்கள்தான் பிரசன்டேஷன் பண்ணணும்” என்ற மேலாளர் குறுஞ்செய்தி அனுப்பினார்.
View this post on Instagram
அதற்கு, “மன்னிக்கவும், நான் முன்பே இந்த நாளை விடுமுறையாக எடுத்திருக்கிறேன். திங்கட்கிழமை வருகிறேன்,” என்று பணிவாக பதிலளித்த ஊழியர், மேலாளர் தொடர்ந்த அழுத்தத்திலும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். மேலாளர் தொடர்ந்து, “இது வேண்டுகோள் இல்ல. நான் உங்கள் விடுமுறையை ரத்து செய்றேன். 11 மணிக்குள்ளாக நீங்கள் வரணும். இல்லையென்றால் உங்கள் போனஸ் குறைக்கப்படும்,” என்று மிரட்டினார்.
இந்த உரையாடல் இணையத்தில் பரவியது. பலரும், “விடுமுறை என்பது உரிமை; விருப்பமல்ல,” என கூறி ஊழியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். சிலர், “விடுமுறை நாளில் பணிக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை,” என்றும், “HR-ஐ தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் ஊக்குவித்தனர். மேலாளர் தனது அதிகாரத்தை நிரூபிக்க முயன்றதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.
இதன் மூலம், பணியிடங்களில் ஊழியர்களுக்கான தனிப்பட்ட நேரம் மற்றும் உரிமைகள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை என்பது மனஅழுத்தம் இல்லாமல் ஓய்வெடுக்க ஊழியர் சம்பாதித்த உரிமை என்பதை இந்த விவகாரம் மறுபடியும் நினைவூட்டுகிறது.