தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்ட கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தமிழக அரசு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை வழங்கியதன் மூலம் அந்த தொற்றில் இருந்து மீண்டு தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் மிக குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தீவிர அறிகுறியும் காணப்படவில்லை. இந்தியாவில் இந்த ஆண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசியா நாடான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மிகவும் குறைவாக காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் விகிதம் குறைந்துள்ளது. உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் வீதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது, சரியான தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்கள் குறிப்பாக காய்ச்சல் நுரையீரல் சார்ந்த இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.