கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய-ஓசியானியா ஜூனியர் டேவிஸ் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 11வது இடத்திற்கான பிளேஆஃப் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் பிரகாஷ் சரண் மற்றும் தவிஷ் பஹ்வா தங்கள் ஆட்டங்களில் வெற்றிபெற்று, இந்தியா 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

 

இந்த வெற்றி இந்தியாவிற்கு முக்கியமான இடத்தை உறுதி செய்தது. ஆனால் போட்டிக்கு பிறகு நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்ததும், இந்திய வீரர் மரியாதையாக கைகுலுக்க பாகிஸ்தான் வீரரிடம் சென்றார். ஆனால் பாகிஸ்தான் வீரர் முதலில் அந்தக் கைகுலுக்கலை தவிர்த்து விட்டார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி கைகுலுக்கும்போது, இந்திய வீரரின் கையை வேகமாக அடித்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் பாகிஸ்தான் வீரரின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்திய வீரரின் அமைதி மற்றும் விளையாட்டு கண்ணியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா–பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மிகுந்த பதற்றத்தில் உள்ளன.

இதையடுத்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற குறிவைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. எனவே, விளையாட்டு போட்டியிலும் இந்த மனச்சண்டை எதிரொலிக்கிறது என்பது தெரிகிறது.