தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் தேர்வு நேரத்தில் சலுகை வேண்டும் என விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை வேண்டும் என கேட்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சலுகை வழங்கலாம். ஒருவேளை மருத்துவ சான்றிதழில் சந்தேகம் இருந்தால், கூடுதல் ஆவணங்களை தேர்வு எழுதிய பிறகு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.