பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார். நீண்டகாலமாக உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரத்தன் டாடாவின் உடல் இன்று தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை அரங்கில் (NCPA) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். மாலை 4 மணிக்கு வர்லியில் உள்ள இடத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

மேலும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ரத்தன் டாடாவைப் புகழ்ந்து, அவர் 150 ஆண்டுகள் பழமையான டாடா குழுமத்தை வெற்றிகரமாக முன்னேற்றியவர் என்றும், 2008ல் மும்பையில் பயங்கரவாத தாக்குதலின்போது அவர் எப்படி உறுதியாக செயல்பட்டார் என்பதையும் நினைவு கூர்ந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை நடைபெறும் இறுதி சடங்கில் கலந்து கொள்வார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார்,  NCP தலைவர் சரத்பவார், சுப்ரியா சூலே எம்.பி,  உள்ளிட்டோர் நேரில் மரியாதை செலுத்தினர். ஆதித்யா பிர்லா குழும சேர்மன் குமார் மங்கலம் உள்ளிட்ட தொழிலதிபர்களும் புகழஞ்சலி செலுத்தினர்.