தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது. அதன்படி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 40 அடி கொடிக்கம்பத்தில் இன்று விஜய் கொடியேற்றுகிறார். இந்நிலையில் தற்போது தவெக கட்சி நிர்வாகிகள் அனைவரும் எடுக்க வேண்டிய உறுதிமொழி குறித்து தற்போது விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் நமது நாட்டின் விடுதலைக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நம்முடைய அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் எப்போதும் பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பாதுகாக்க பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.

மக்களாட்சி மற்றும் மத சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து மக்கள் நல பணி  செய்பவராக கடமை ஆற்றுவேன் என உறுதி எடுக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் போன்றவைகளில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். மேலும் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என உளமாற உறுதி கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.