
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை மாற்றுவது தொடர்பாக மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வருகிற மே 30ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் வைக்க வேண்டும், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் மூன்றாவது மொழியில் கூட பெயர் வைத்துக் கொள்ளலாம்.
இதை செய்ய தவறினால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் இருக்கக்கூடிய இந்திய சில்லரை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிக சின்னங்களுடைய அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்ட வேண்டுமென்றும் அவற்றை மாற்றும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் என்றும் அந்த மனதில் கூறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக இருந்த போதிலும் நிதி உள்ளிட்ட காரணமாக உடனடியாக இந்தப் பெயர் பலகையை மாற்ற முடியாது என்பதால் இந்தப் பெயர் பலகையை மாற்றுவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கால அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.