
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி நீங்கள் பலமுறை கேள்வி கேட்ட நிலையில் நானும் பதில் அளித்துள்ளேன். தர்மபுரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்போது அவர் நான் என்ன குற்றம் செய்தேன். என்னை ஏன் பதவி நீக்கம் செய்தீர்கள் என்று கேட்டார். இது முழுக்க முழுக்க கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் திசை திருப்பும் முயற்சி.
அவர் தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். அதற்கு உரிய விளக்கம் அளிப்பது என்னுடைய கடமை. இனிப்பை தவிர்த்து கசப்பான மருந்துகளை கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அவர் என்னை குற்றவாளியாக்கி கட்சிக்காரர்களிடமும் மக்களிடமும் அனுதாபம் தேடி கொள்கிறார். கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடோடு நடத்திய கட்சியில் தற்போது அவர் கலகத்தை உண்டாக்குகிறார். வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பது போல் கட்சி வளர்ச்சிகளுக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்கிறார்.
அழகான ஆளுயற வளர்ந்த கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார். புதுச்சேரியில் நடந்த பொது நிகழ்ச்சியில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார். ஏதோ போகிற போக்கில் நான் இதை சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் நான் சொல்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு கடன் பிரச்சினைகள் குறித்து பேசிய போது பெற்ற தாயையே அவர் பாட்டிலை வீசி எறிந்து தாக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நல்ல வேலையாக அந்த பாட்டில் அவர் மீது படவில்லை எனவும் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அன்புமணிக்கு தலைமை பண்பு என்பது அறவே இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே பாமகவில் பிரச்சனைகள் என்பது இருக்கும் நிலையில் தற்போது வெளிப்படையாகவே அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.