தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் மழை வெளுத்து வாங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரை, தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.