புது தில்லியில் கடந்த ஜூன் 12ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர் – எண் AI 171) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மேகனி பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதிக்கு மேல் விழுந்ததில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனுடன் மொத்தம் 274 பேர் கொல்லப்பட்டனர். இத்தனை பேர்களின் உயிர் பறிபோனது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த பெரும் இழப்புக்குப் பிறகு சில நாட்களிலேயே, ஏர் இந்தியா சார்ந்த நுழைவாயில் சேவை நிறுவனமான AISATS-இன் குருகிராம் அலுவலகத்தில் விருந்து நடத்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. வீடியோ வெளியாகியதும் பலர் கடும் விமர்சனங்களை பதிவு செய்தனர். பொதுமக்கள் இன்னும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நிலையில், விருந்துவைத்தது சமூக ஒழுக்கத்துக்கும், நிறுவனத்தின் பொறுப்புணர்வுக்கும் முரணானது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, AISATS நிறுவனம் 4 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், பல ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “இத்தகைய நடத்தை எங்கள் நிறுவன மதிப்புகளுக்கு முரணானது.

எங்களின் பச்சாத்தாபம், பொறுப்புணர்வு மற்றும் தொழில்முறை தத்துவங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று அவர் கூறினார். சமூக ஊடகங்களிலும் இந்த விருந்துச் சம்பவம் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம், விமானத்துறையில் செயல்படும் நிறுவனங்கள் பேரழிவுகளுக்குப் பின்னர் எவ்வளவு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து கேள்விகளை எழுப்புகிறது. பல உயிர்கள் பறிபோன நேரத்தில், விருந்துவைத்து கொண்டாடுவது மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் செயல்.

மேலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு தெளிவான விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்பது தற்போது ஏற்பட்டுள்ள நிலையின் முக்கிய பாடமாக உள்ளது.