
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சமீபத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரின் மனதை தன்னக்குள் இழுத்துள்ளது. புதரிலிருந்து குழந்தை அழும் சத்தத்தை கேட்ட சில பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மோசமான நிலையில் கிடப்பதை கண்டனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதுபற்றி அறிந்து உடனடியாக அங்கு வந்த காவல் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திர சிங் தலைமையிலான காவல்துறையினர், அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அதன் நிலைமை சீராகப்பட்டது. ஆனால், குழந்தையின் பெற்றோர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை, மேலும் குழந்தையை ஏற்க முன்வருபவர்களும் இல்லை.
இதனையடுத்து, புஷ்பேந்திர சிங் மற்றும் அவரது மனைவி ராஷி ஆகியோர், குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். இவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லாத ஏக்கம் தொடர்ந்து இருந்தது. அந்த ஏக்கத்துக்கு இக்குழந்தை தீர்வாக அமைந்தது. நவராத்திரி பண்டிகையின் போது கடவுளே அவர்களுக்கு குழந்தையை அருளியதாக இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.