திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் காரை மோதவிட்டு தந்தை மற்றும் மகனை கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விவசாயியான காளிமுத்து என்பவர் தனது மகன்கள் சின்னத்துரை மற்றும் ஜெயராஜ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பல் காரில் வந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

அதன்பின், படுகாயமடைந்த காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி, அவரது தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. கடந்த 2006-ஆம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இரு குடும்பத்து பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு சண்டையே இந்த தீராத பகைக்குக் காரணமாகும்.

மேலும் பழிக்குப்பழியாக கடந்த 20 ஆண்டுகளில் இந்த இரு தரப்பிலும் சேர்த்து இதுவரை மொத்தம் 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த கொடூர இரட்டைக் கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் பேரில், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களைப் பெற மறுத்து வருவதாலும், கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதாலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.