ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருவதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. கடுமையான வெயிலின் காரணமாக விளையாட்டு ராக்கெட்டுகள் உருகுவது போன்ற காட்சிகளும், பாரிஸ் போன்ற நகரங்களில் மின்விசிறிகளை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் பிரான்சில் மட்டும் இந்த வெப்ப அலையினால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், குறிப்பாக முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதீத வெப்பத்தின் காரணமாக போக்குவரத்து அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சார விநியோகத்திலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

“>

இதனால் குளிர்ச்சியூட்டும் சாதனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளதால் பல இடங்களில் மின்விசிறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை மையமாக வைத்து, இணையவாசிகள் பலர் ஐரோப்பாவின் நிலையை இந்தியாவின் கோடைகாலத்துடன் ஒப்பிட்டு நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து “41°C என்பது டெல்லியின் சாதாரண கோடைகால வெப்பநிலைதான், அங்கு அதைவிட அதிகமாகவே வெயில் அடிக்கும் இதற்கு ஏன் ஐரோப்பியர்கள் இவ்வளவு பதற்றமடைகிறார்கள்?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே வேளையில், ஐரோப்பிய நாடுகள் பொதுவாக குளிர்ந்த காலநிலையைக் கொண்டவை என்பதால், அங்குள்ள உள்கட்டமைப்புகளும் தயாரிப்புகளும் இத்தகைய கடுமையான வெப்பத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்றும், இந்த திடீர் இயற்கை மாற்றம் அவர்களின் உள்கட்டமைப்பு பலவீனத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் மாற்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் இத்தகைய தீவிரமான காலநிலை மாற்றங்களைச் சமாளிக்க ஐரோப்பிய நகரங்கள் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதை இந்த வெப்ப அலை உணர்த்துவதாக காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.