மீரா-பயந்தர் பகுதியில் பரவிய ‘ஸோம்பி டிரக்’ குறித்த செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. அந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட இளைஞன் உண்மையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை; மாறாக, அவர் ஒரு தீவிரமான வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த இளைஞனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உடல் கட்டுப்பாட்டை இழந்து விசித்திரமாக நடந்து கொண்டதை அங்கிருந்தவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அது ‘சைலாசின்’ போன்ற பயங்கரமான போதைப்பொருளின் தாக்கம் என சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினர்.

இதனால் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ரத்தத்தில் எவ்வித நச்சுத்தன்மை கொண்ட போதைப்பொருளும் இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற வீடியோக்களைப் பகிர்ந்து தேவையற்ற பீதியை உருவாக்க வேண்டாம் என்றும், இது போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் உண்மைத்தன்மையை ஆராயாமல் செயல்படுவது சமூக ஒழுங்கைக் கெடுக்கும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.