மும்பை கண்டிவாலி பகுதியில் தெரு நாய் ஒன்றுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது சம்தா நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லோகண்ட்வாலா பகுதியில் உள்ள சாக்கடை ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

 

அங்கு சென்ற அதிகாரிகள் சாக்கடைக்குள் ஒரு தெரு நாயுடன் இருந்த சஞ்சய் கௌட் என்ற 40 வயது நபரைப் பிடித்தனர். அந்த நாய் மிகவும் பயந்து நடுங்கிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அதன் உடலில் இருந்து ரத்தம் மற்றும் திரவம் கசிவதைக் கண்ட விலங்கு நல ஆர்வலர் அங்கிதா காலே உடனடியாகப் புகார் அளித்தார்.

பீட்டா இந்தியா அமைப்பின் உதவியுடன் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 325 மற்றும் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நாய் தனியார் கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விலங்குகளுக்கு எதிரான இத்தகைய கொடூரச் செயல்கள் மனிதர்களுக்கு எதிரான வன்முறையின் தொடக்கமே என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.