பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு நாளில் மேடையில் செய்த செயல் காரணமாகப் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர், ரிஷப் ஷெட்டி (Rishab Shetty) இயக்கி நடித்த ‘காந்தாரா’ (Kantara) திரைப்படத்தில் வரும் சாமியாடி எழுப்பும் ஓசையை மற்றும் ஆக்ரோஷமான முகபாவத்தை, மேடையில் கிண்டலடிக்கும் விதமாகப் பிரதிபலித்தார்.

ரன்வீர் சிங் இவ்வாறு செய்தபோது, ரிஷப் ஷெட்டியும், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்தும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேலும், அவர் காந்தாரா படத்தில் வரும் சாமுண்டி தெய்வத்தைக் குறிப்பிடும்போது, அதை ‘பெண் ஆவி’ (Lady Ghost) என்று கூறியதும் கன்னடப் பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடர்களின் தெய்வங்களை ரன்வீர் சிங் கேலி செய்வதாகவும், அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர் மன்னிப்புக் கேட்கத் தவறினால், டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள அவரதுத் திரைப்படமான ‘துரந்தர்’ (Durandhar) படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என்றும் பலர் எச்சரித்துள்ளனர்.