கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த பரபரப்பான சம்பவத்தில், ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயன்ற திருடனை ரோந்து போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில், வெள்ளை நிற பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்த போலீஸ் அதிகாரி, ஏடிஎம்மை சேதப்படுத்திக் கொண்டிருந்த சந்தேக நபரை திடீரென எதிர்கொண்டு, அவரை கட்டுப்படுத்தும் காட்சி தெளிவாகக் காணப்படுகிறது. ரோந்து பணியில் இருந்த ஏஎஸ்ஐ மல்லிகார்ஜுன், ஏடிஎம் மையத்திற்குள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை கவனித்து, உடனடியாக உள்ளே சென்று குற்றவாளியை வெளியே இழுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

 

போலீசார் விசாரணையில், குற்றவாளி ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீசார் விரைந்து செயல்பட்டதால், பெரிய அளவிலான நிதி இழப்பு தவிர்க்கப்பட்டதோடு, குற்றவாளி சம்பவ இடத்திலேயே பிடிபட்டார். சம்பவ இடத்தில் போலீசார் காட்டிய வேகமான நடவடிக்கை, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் பல்லாரி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காட்சிகள், ரோந்து போலீசாரின் விழிப்புணர்வு மற்றும் வேகமான நடவடிக்கையின் சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகின்றன.