
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், ஒரு கௌரவக் கொலை வழக்கின் பிரேத பரிசோதனை அறிக்கை கையகப்பட்டு, தற்கொலை என மாற்றப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது.
17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘கழுத்து நெரித்தல்’ என இருந்த அறிக்கையை ‘தூக்கில் தொங்கியதாக’ மாற்ற, அரசு மருந்தாளுநர் மதுர் ஆர்யா ரூ.50,000 லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. இவருடன், பிரேத பரிசோதனை வார்டில் பணியாற்றும் கணினி ஆபரேட்டர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியின் பின்னணியில், சம்பல் மாவட்டத்தில் பல பிரேத பரிசோதனை அறிக்கைகள் விருப்பத்துக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளன என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 32 மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கை தன்னிச்சையாக தற்கொலை வழக்காக மாற்றியதற்காக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தகவல் வெளியாகியதும் போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரது தொடர்பும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கிருஷ்ண குமார் பிஷ்னோய் தெரிவித்தார்.