
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சாமியாத்தாள் விவசாயம் பார்த்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவரது திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். இவர் வீட்டு வாசலில் கட்டில் போட்டு படுத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி அந்த பெண்ணை மிரட்டி வீட்டிற்குள் இருந்த நகை பணம் போன்றவற்றை எடுத்து தருமாறு கூறினர்.
இதனால் பயந்து போன மூதாட்டி கத்தி கூச்சலிட்ட நிலையில் அவர்கள் அந்த மூதாட்டியை கத்தியால் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவரை மீட்டு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முன்பாக சிவகிரி மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் தோட்டத்து வீடுகளில் தனியாக வசித்து வந்த தம்பதிகளை குறி வைத்து நடந்த கொடூர கொலை வழக்கு தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் மூன்று பேர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.