
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அன்றைக்கு சொன்னது போன்று இப்போதும் விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறோம். ஆனால் விஜய் புதிதாக எதுவும் சொல்லவில்லை. திராவிட சித்தாந்தங்களை மட்டும் தான் அவர் பேசுகிறார். ஆனால் நடிகர் விஜயின் அரசியல் வருகையால் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் விஜய் அக்டோபர் மாதத்திற்கு பிறகு எத்தனை முறை வெளியே வந்துள்ளார். ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பவர் மக்களுக்காக 365 நாட்களும் களத்தில் இருக்க வேண்டும். ஒரு நடிகராக உச்சத்தில் இருந்து தற்போது அரசியலுக்கு வந்துள்ள விஜய் மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
அதே சமயத்தில் அவர் புதிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை மட்டுமே பேசி வருகிறார். விஜயின் பேச்சு திராவிட கொள்கைகளோடு ஒத்துப்போவதால் அவருடைய அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வெற்றி தோல்விகள் என்பது வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் அதற்கெல்லாம் எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். திராவிட கட்சிகளின் வாக்குவங்கி என்பது தற்போது மூன்றாக பிரிந்துவிட்ட நிலையில் தேசிய அளவில் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பாஜக நல்ல வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக வளர்ச்சி அடைந்த ஒரு கட்சியாக திகழ்கிறது என்றார்.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு இந்திய அரசில் இரண்டு கட்சிகள் மட்டும் தான் மிகவும் வித்தியாசமான முறையில் பயணிக்கிறது. அதில் ஒன்று திமுக மற்றொன்று ஆம் ஆத்மி கட்சி என்றார். ஊழல் கட்சியாக இருக்கும் திமுக ஜெயிலிலிருந்து ஊழல் குற்றச்சாட்டில் வெளியே வந்த ஒருவரை காந்தியவாதியாக கொண்டாடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிது கிடையாது. இது எல்லாவற்றையுமே மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார். அதன்பிறகு சீமானுடன் கூட்டணியா என்று கேட்ட கேள்விக்கு சீமான் அண்ணன் உடன் கூட்டணி கிடையாது. அவருடைய பாதை வேறு எங்கள் பாதை வேறு. மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக சரித்திர வெற்றியை பதிவு செய்யும் என்று கூறினார்.