பிரேசில் நாட்டில் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளம் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டு உச்ச நீதிமன்றம், எலான் மஸ்க்கிற்கு 24 மணி நேர கெடு விதித்துள்ளது. பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் தளத்தின் சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்காவிட்டால், எக்ஸ் தளம் அந்நாட்டில் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, தணிக்கை உத்தரவுகளை காரணம் காட்டி, 3 வாரங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டில் உள்ள தனது அலுவலகத்தை மூடி, ஊழியர்களை நீக்கியது எக்ஸ் நிறுவனம். இருப்பினும், அந்நாட்டில் சேவை தொடரும் எனவும் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மிகவும் பிரபலமானது. இங்குள்ள மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், செய்திகளைப் பெறவும் இந்த தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, எக்ஸ் தளம் முடக்கப்பட்டால், இங்குள்ள மக்களின் தகவல் தொடர்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.