
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார். அப்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக விவசாய நிலங்கள் இல்லாத வேறொரு இடத்தில் விமான நிலையத்தை அமையுங்கள் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, மத்திய அரசு விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடத்தை தேர்வு செய்யவில்லை. மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த பட்டியலில் தான் பரந்தூர் இருந்தது. ஒருவேளை அங்கு பிரச்சனை இருக்கிறது என்றால் சகோதரர் விஜய் ஆக்கபூர்வமான இடத்தை அவரே தேர்வு செய்து கூற வேண்டும். பெங்களூரு விரைவுச்சாலை அருகில் பரந்தூர் வரும் நிலையில் உங்களுக்கு தெரிந்த வேறு இடமிருந்தால் அதனை தேர்வு செய்து சொல்லுங்கள். தமிழகம் எல்லாத்தையும் எதிர்க்கக்கூடிய மாநிலமாக இருந்தால் எப்படி ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைய முடியும். பரந்தூர் மக்கள் விவசாய நிலங்கள், பறவைகள் சரணாலயங்கள் மற்றும் குடியிருப்புகள் இருப்பது என்று கூறுவது நியாயம்தான்.
ஆனால் மாநில அரசை இதையெல்லாம் யோசித்தது தான் அந்த இடத்தை தேர்வு செய்திருக்க வேண்டும். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும் போது பரந்தூரை தான் பரிந்துரைத்துள்ளது. மாநில அரசு கொடுத்த அந்த பட்டியலில் இடத்தை தேர்வு செய்தது மட்டும்தான் மத்திய அரசு. சென்னைக்கு கட்டாயம் விமான நிலையம் தேவையாக இருக்கும் நிலையில் ஆனால் 2.5 கோடி பயணிகளை கையாலும் திறன் கொண்ட விமான நிலையமாக சென்னை இல்லை.
அடுத்த 10 வருடங்களில் 10 கோடி பயணிகளை கையாளும் விதமாக ஏர்போர்ட்டை தயார் செய்ய வேண்டும். இதனை செய்ய ஆயிரம் ஏக்கர் இடம் போதுமானது கிடையாது. பெங்களூருவில் 4000 ஏக்கரும் டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் 5000 ஏக்கரும் இருப்பதால் அனைத்துமே அங்கு தான் போகும். மேலும் அனைத்தும் அப்படி சென்று விட்டால் தமிழகம் எப்படி வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளார்.