மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர், ரயில்வே பயணிகளிடம் போலி டிக்கெட்டுகள் விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வாரணாசி அரசு ரயில்வே காவல்துறை (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து இவர் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்ட்ட ஜெய்ஸ்வாலிடம் இருந்து போலியான ரயில்வே அடையாள அட்டையும், TTE ஏப்ரனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது அதிர்ச்சி தகவலாக, ஆதர்ஷ் ஜெய்ஸ்வால் தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்ளவே இந்த வழிக்குப் பாய்ந்ததாக தெரிய வந்தது. பி.டெக் பட்டதாரியான இவர் வேலை இல்லாமல் இருந்ததால், காதலியின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், அரசு வேலையாளர் போல நடித்து நம்பவைக்கும் நோக்கத்தில் TTE வேடம் எடுத்ததாக GRP இன்ஸ்பெக்டர் ராஜுல் நகர் தெரிவித்தார்.

ஜெய்ஸ்வால் தனது கிராமத்தில் உள்ள சைபர் கஃபேவில் போலி அடையாள அட்டை மற்றும் ரயில்வே டிக்கெட்டுகளை தயாரித்து விற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் இருந்து லக்னோவுக்கான ஜந்தா எக்ஸ்பிரஸில் பி-3 பெட்டிக்கான டிக்கெட்டை ஜோதி கிரண் மற்றும் குங்குன் என்ற பயணிகளுக்கு விற்றுள்ளார். ஆனால் அவர்கள் பயணத்தின் போது அந்த பெட்டி இல்லை என்று தெரிந்து, பயணியின் சகோதரி ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும், மும்பைக்கு பயணிக்க திரும்பிய தினேஷ் யாதவ் என்பவருக்கும் போலி டிக்கெட்டை விற்றுள்ள ஜெய்ஸ்வால், ரயிலில் ஏற்பட்ட சந்தேகங்கள் காரணமாக வாக்குவாதத்திற்கும் சென்றுள்ளார். தொடர்ச்சியாக வந்த புகார்கள் மற்றும் அவரது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது மோசடி, பொய்யான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாடுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.