பீகார் மாநிலத்தில், அரசு ஆம்புலன்சின் கூரையில் ஒரு பெண் நடனக் கலைஞர் நடனம் ஆடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில், ஆம்புலன்ஸ் ஒரு கூடாரத்தடியில் நிறுத்தப்பட்டு, அதன்கூரையில் கலைஞர் ஒருவர் உற்சாகமாக நடனம் ஆடுகிறார். பின்னணியில் ஒரு போஜ்புரி பாடல் ஒலிக்கிறது. அந்த இடத்தில் திரண்டிருந்த மக்கள் அவரது நடனத்தைக் கவனிக்க, சிலர் காசும் கொடுப்பதைக் காணலாம்.

 

இந்த வீடியோவில், ஆம்புலன்சின் முன்பக்க கண்ணாடியில் “ஜிவானி பீகார், சப்னா ஹோ சர்க்கார்” என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அரசுப் பயன்படுத்தும் மருத்துவ வாகனம் என்று தெரியவருவதால், சமூக ஊடகங்களில் இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆம்புலன்ஸ் ஒரு அவசர மருத்துவ சேவைக்கான வாகனம் என்பதையும், அதன் மீது இந்தவாறு கலை நிகழ்ச்சி நடத்துவது மிகவும் தவறான செயலாக இருப்பதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது எங்கு எடுக்கப்பட்டது, யார் ஏற்பாடு செய்தது என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை. ஆனால், வீடியோவில் காட்சி காணும் மக்கள் யாரும் இது தவறு எனக் கூறவோ, தடுக்கவோ முன்வரவில்லை. மாறாக, சிலர் கலைஞருக்கு காசு கொடுத்து உற்சாகமாக பார்ப்பது காணப்படுகிறது. சம்பவம் குறித்து அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. ஆனால், அரசு வாகனத்தின் தவறான பயன்பாடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.