
‘தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறிய கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது, கமல்ஹாசன், “தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என தெரிவித்தார்.
அவரது பேச்சுக்கு சிவராஜ்குமார் தலையசைத்ததை காண முடிந்தது. இதைத் தொடர்ந்து கன்னடத்தில் பெரும் எதிரொலி எழுந்துள்ளது. கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழிலிருந்து கன்னடம் உருவானது என கூறுவது மக்களின் மொழிப் பெருமையை புண்படுத்தும் வகையிலும், அவதூறாகவும் உள்ளது எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியதாக நடிகர் சிவராஜ்குமார் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இதற்குப் பதிலளித்த சிவராஜ்குமார், “நான் கமலின் பேச்சை முதலில் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இரண்டாவது முறையில்தான் புரிந்தது. அவர் கூறிய கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. எனது முதல் முன்னுரிமை கன்னடம். ஆனால் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன்.
கமல் சார் கன்னட சினிமாவுக்கு பல விஷயங்களில் ஒத்துழைத்தவர் என்பதை மறக்க முடியாது” என விளக்கம் அளித்துள்ளார். இதனால் ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் வெளியாவதா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
கமல்ஹாசன் இந்நிலையில் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும், மொழிப் பெருமையை பாதுகாக்கவே பேசியதாகவும் தெரிவித்துள்ளதால், விவாதம் மேலும் தீவிரமாகியுள்ளது. கன்னட ரசிகர்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள பிரதான கோரிக்கையாக உள்ளது.