பெங்களூருவின் புவனேஸ்வரிநகரில் சொந்தமாக மசாஜ் சென்டர் ஒன்றைத் தொடங்கிய சஞ்சு என்ற இளைஞர் மீது, அவரின் முன்னாள் ஓனர்  காவ்யா உள்ளிட்ட சிலர்  கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 29-ம் தேதி இரவு 8 மணியளவில், காவ்யா தனது தோழர்களுடன் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து, சிகரெட் புகைத்தவாறு சஞ்சுவின் தலை, முகம் மற்றும் முதுகில் உதைத்து, குத்தி தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சிசிடிவி கேபிள்களையும் துண்டித்ததால் சம்பவத்தின் நேரடி ஆதாரங்கள் அழிக்கப்பட்டன.

தாக்கிய பிறகு, சஞ்சுவை வலுக்கட்டாயமாக காரில் அமர வைத்து, தாசரஹள்ளி பிரதான சாலை வழியாக ஜக்கூர் நோக்கி அழைத்துச் சென்றனர். வழியில், கத்தி மற்றும் பீர் பாட்டிலால் சஞ்சுவை தாக்கி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துவிடுவதாக மிரட்டினர்.

காவ்யாவின் மசாஜ் சென்டரில் முன்பு வேலை பார்த்த சஞ்சு, தனது மனைவியுடன் சேர்ந்து புதிய மசாஜ் சென்டர் ஒன்றைத் தொடங்கியிருந்தார். இதனால் கோபமடைந்த காவ்யா பழிவாங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து சஞ்சுவின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காவ்யா, முகமது, ஸ்மிதா மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது அமிர்தள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டப்பட்ட சஞ்சுவை அந்தக் கும்பல் போலீஸ் நிலையம் அருகே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவும் பரவலாக வைரலாகி வருகிறது.