தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 21-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.

மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடலின் அனேக பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், குமரி கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் வருகிற 19ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.