
ஹரியானாவின் யமுனாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த சோகம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு சென்றபோது அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. அதன் பிறகு வயிற்றில் மருத்துவக் குழு தையல் போட்ட போது தவறுதலாக ஒரு பஞ்சுத் துணியை விட்டுவிட்டனர்.
இதனால் அந்தப் பெண் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்து தற்போது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளார். மருத்துவமனையின் இந்த அலட்சிய நடவடிக்கையை கண்டித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிபிபூரில் வசிக்கும் உஸ்மான் என்பவர் கூறுகையில், தனது மனைவி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்கு பின், உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. பல மருத்துவமனைகளை அணுகியும், சரியான விளக்கம் வழங்கப்படவில்லை. யமுனாநகரில் உள்ள அல்ட்ராசவுண்ட் மையம் கூட, உண்மையை மறைத்து மருத்துவமனையை காப்பாற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதிகம் காலம் தாமதமாகிய பிறகு, அந்தப் பெண்ணை பஞ்ச்குலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, வயிற்றுக்குள் ஒரு பஞ்சு துணி இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக, பெண்ணுக்கு தீவிரமான தொற்றுகள் பரவியதோடு, கண்பார்வைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ அலட்சியமல்ல, உயிருடன் விளையாடும் குற்றம் என குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மினி செயலகத்தை அடைந்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் பொறுப்புள்ள மருத்துவரும், மருத்துவமனை நிர்வாகமும் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். விசாரணையை விரைவாக செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், தனியார் மருத்துவமனைகளில் அலட்சியத்தின் கடுமையை வெளிக்கொணர்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மருத்துவமனைகளில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெறும் சூழலில், இப்படி ஒரு தவறு நடைபெறுவது மக்கள் நம்பிக்கையை குலைக்கும். மேலும் தற்போது, இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.