தமிழ்நாடு அரசியலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தரக்குறைவான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான விமர்சனங்களுக்குப் பிரபல பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அரசியல் மோதல்களுக்காகப் பெண்களை இழுத்துப் பேசுவதும், பொதுவெளியில் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் கடும் அதிர்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள் முந்தைய தலைவர்களை விட நாகரிகத்துடனும் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்னும் மோசமாகப் நடந்து கொள்வது பெரும் ஏமாற்றத்தைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கேவலமான அரசியல் பேச்சுக்களை வெறும் ஆண் வர்க்கக் கலாச்சாரமாக கடந்து சென்றுவிட முடியாது என்று சாடியுள்ள சின்மயி, இதற்கு எதிராகத் தமிழ்நாட்டுப் பெண்கள் ஏன் இன்னும் தங்களின் கோபத்தையும் வெளிப்படையான ஒற்றுமையையும் தீவிரமாக வெளிப்படுத்தவில்லை என்று நியாயமான கேள்சியை எழுப்பியுள்ளார்.

அரசியல் மேடைகளில் பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், இதற்கு எதிராகச் சமூக வலைதளங்களிலும் நேரிலும் பெண்கள் அனைவரும் ஒற்றைக் குரலில் கடும் எதிர்ப்பைக் காட்ட வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“>

 

இவரது இந்த அதிரடியான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளதுடன், பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.