மும்பை மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நவிமும்பையில் வசித்து வருகிறார். மருத்துவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு  கும்பலால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு ரூபாய் 1 கோடியே 85 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்தார். பின்பு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம் பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண் டாக்டரை மோசடி செய்தவர்கள் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபுலால்(45), அமிஷ் தீபக்(42) மற்றும் ராஜ்குமார்(55) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மூவரையும் உடனடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது மூவரும் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதனை அரசு அலுவலகம் போல மாற்றி அங்கிருந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் போல் பேசி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே மூவரிடம் இருந்தும் ரூபாய் 11 லட்சத்து 35 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப், 18 செல்போன்கள், 32 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் 27 சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்பு கைது செய்த மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களாக  நாடு முழுவதும் டிஜிட்டல் கைது என்ற பெயரில் சில கும்பல் மோசடி செய்து வருகின்றனர். இதனால் இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.