ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்கள் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகளை கருதி தயாரிப்பாளர் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில், திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இது குறித்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் கீழ் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம். நீதிபதிகளே விமர்சிக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

எனவே ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ, நாடோ ஆன்லைன் விமர்சனத்தில் இருந்து தப்ப முடியாது. சில படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரலாம். பின்னர் சில நாட்களிலேயே அந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடலாம். அமல்படுத்த முடியாத கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் முன் வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை அமல்படுத்தினால் இங்கே தடுக்கப்பட்ட விமர்சனம், வேறு ஏதாவது ஒரு இடத்தில் மற்றொருவர் அதை செய்வார் அப்போது என்ன செய்ய முடியும்?. பொதுவாக திரைப்படங்கள் வெளியான உடனே அனைத்தும் நேர்மறையான விமர்சனங்களை பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக் கூடாது.

இன்றைய காலகட்டங்களில் வீடுகளில் இருந்தபடியே ஓடிடி தளங்களில் பலர் திரைப்படங்களை பார்த்து வருகிறார்கள். இது திரையரங்குகளுக்கு ஒரு பெரிய சவால் என்பதே மறந்துவிட்டு மனு அளித்துள்ளார்கள் என கூறினார். பின்னர் சாத்தியமில்லாத இந்த கோரிக்கையை அமல்படுத்த முடியாது. தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என நீதிபதி அறிவித்தார்.