திகம்கர் மாவட்டத்தில் ஒரு தாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீட்டில்  பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக  தனது 20 நாள் குழந்தையை குளத்தில் வீசியுள்ளார் ஒரு இளம் தாய். அதிர்ஷ்டவசமாக, அருகிலிருந்த இளைஞர் உடனடியாக குளத்தில் குதித்து குழந்தையை உயிருடன் மீட்டுள்ளார்.

திகம்கர் நகர சிட்டி கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகேந்திர சாகர் குளத்திலுள்ள பிரதாபேஷ்வர் காட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தாய், தனது தாயுடன் சேர்ந்தே அந்த இடத்திற்கு வந்துள்ளார். பின்னர், தனது 20 நாள் குழந்தையை ஒரு பையில் வைத்து, குளத்தில் வீசி விட்டார். அப்போது அருகில் இருந்த லல்லு ராய்க்வர் என்ற இளைஞர் நிகழ்வைக் கண்டதும், தாமதிக்காமல் குளத்தில் குதித்து, குழந்தையை காப்பாற்றினார். இதேவேளை, மக்கள் இருவரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையின் போது அந்தப் பெண் கூறியதாவது, “திருமணமான ஆறு மாதங்களுக்குள் குழந்தை பிறந்ததால், மாமியார் சந்தேகத்துடன் பார்த்தனர். தினமும் சித்திரவதை செய்தார்கள். இதனால் மன அழுத்தத்தில், என் தாய் வீட்டிற்கு வந்தேன்.  இதனால்தான், இந்த முடிவை எடுத்தேன்” என்றார். இது குறித்து போலீசார் புகாரை பதிவு செய்து, தாய் மற்றும் மகளை கைது செய்துள்ளனர்.

குழந்தையின் நிலைமையைப்பற்றி டிகம்கர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் தினகர் ரத்தோர் கூறுகையில், “புதிதாகப் பிறந்த குழந்தையை காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். குழந்தைக்கு சுவாசக்குழாய் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் உடல்நலம் மேம்பட்டு வருகிறது. குழந்தை ஆபத்தில் இருந்து மீண்டுள்ளது” என்று தெரிவித்தார். குழந்தையை உயிருடன் மீட்ட இளைஞருக்கு சமூகத்தில் பாராட்டுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.