ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் அருகே இன்று காலை ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிப்பு மைதானத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே நிகழ்ந்ததால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த சம்பவம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் 11 இடையிலான இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், சிலிண்டரின் கசிவே வெடிப்புக்கு காரணம்  என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் யாருக்கும் உயிரிழப்போ, பெரும் காயங்களோ ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் ரசிகர்களிடையே  பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் அதிகாரிகள் மற்றும் போலீசார் இதற்கு விளக்கம் கொடுத்தனர். “போட்டிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மைதானத்தின் உள்ளே அல்லது சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அகமதாபாத் முழுவதும் போலீசார் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், ரசிகர்கள் அமைதியாக நிகழ்வை அனுபவிக்கலாம் என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.