
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் மீது ஏற்கனவே ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு 23 திருட்டு வழக்குகளும் பதிவாகியுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்வதற்கு முன்பாகவே ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு இவர் மீது பதிவானதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்த நிலையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணை நடத்துவதற்காக நியமித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஞானசேகரன் தன்னை பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும் அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7-ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.