சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கிளப்பியுள்ளது. இந்த காணொளியில், ஒரு சிறு வயதுக் குழந்தை, ஒரு பெரிய பாம்புடன் (கோப்ரா) பயமின்றி விளையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அந்த குழந்தை பாம்பின் தலை பகுதியை தட்டியபடியும், அதை பிடிக்க முயற்சிப்பதுபோலும் செய்யும் செயல் அஞ்சாத மனதை காட்டும் வகையில் உள்ளது. அதைவிட ஆச்சரியமான விஷயம், அந்த பாம்பு குழந்தையை கடிக்கவில்லை என்பதுதான்.

இந்த வீடியோவை @rareindianclips என்ற பயனர்  X தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு “கோப்ரா vs பவுவா” என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை 45,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து வந்துள்ள நிலையில், ஏராளமான லைக்குகள் மற்றும் கருத்துகள் குவிந்துவருகின்றன. ஒரு பயனர், “இது உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் குழந்தை” என குறிப்பிட, மற்றொருவர், “இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாம்புகள் பற்றிய பயம் இயல்பாக கிடையாது, அது கற்றுக்கொள்ளப்படும் பயம்” என விளக்குகிறார். சிலர், “பாம்பின் விஷம் அகற்றப்பட்டிருக்கும்” என்றும், “பாம்பின் பற்களே இல்லாமல் செய்திருப்பார்கள்” என்றும் சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.

 

இவ்வாறு குழந்தையை ஒரு விஷப்பாம்புடன் விளையாட அனுமதித்ததை பலரும் கடுமையாக கண்டிக்கிறார்கள். “இது குழந்தையின் உயிருக்கு மிகப்பெரும் ஆபத்து. இதை வீடியோ எடுக்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், “இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட மீறல்” என்றும், “இந்தக் காணொளி ‘காமெடி’யாக பரிந்துரைக்கப்படுவதும் சமூகப்பொறுப்பின்றி செய்யப்படும் செயல்” என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் பாம்பு விஷம் அகற்றப்பட்டிருந்தாலும் கூட, ஒரு விஷப்பாம்புடன் குழந்தையை விளையாட வைப்பது சட்ட ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் மிகுந்த கண்டனத்துக்குரியது. தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதால், அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.