தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ஒரு பெண்ணை நிர்வாணமாக திமுக கட்சி நிர்வாகி பாரதிராஜா வீடியோ எடுத்து பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அது தொடர்பாக புகார் அளித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அவர் தற்கொலைக்கும் என்றதாகவும் கூறி வானதி சீனிவாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை செவிலியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு ரா.பாரதிராஜா. இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்து 8 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தற்கொலை முயற்சி மேற்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட செவிலியர். கட்சிபேதத்தைத் தாண்டி ஒரு சக பெண்ணாய் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களிடம் சில கேள்விகள். திமுகவின் கட்சி பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்துக் கொண்டது, தஞ்சாவூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்தது, செவிலியரை மிரட்டியது என தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவோர் பலரும் திமுகவினராக இருப்பது ஏன்?

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளிக்கப் பல அபலைப்பெண்கள் தயங்கும் நிலையில் புகார் அளித்த பெண்ணின் விபரங்களை பொதுவெளியில் விடுவது, புகார் அளித்து பல நாட்களாக நடவடிக்கை எடுக்காதது என பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் மேலும் வதைப்பது ஏன்? குற்றச்செயல்களில் ஈடுபடும் திமுகவினரை காப்பாற்றுவதில் இருக்கும் தங்கள் அரசின் கவனம் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கி காட்டப்படாதது ஏன்? தங்களது ஆட்சியில் அறிவாலயத்தின்  மானத்தைவிட பெண்களின் பாதுகாப்பு என்று முக்கியத்துவம் பெறும்? தங்களது அரசின் நடவடிக்கையின்மையாலும் தங்கள் கட்சியினரின் குற்ற நடவடிக்கைகளாலும் பாதிக்கப்படும் பெண்களை கண்டு தங்கள் பொறுப்பை உணருங்கள்! இனியாவது தங்கள் கட்சியினரின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளை தடுத்து பெண்களுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குங்கள்!