மேற்குவங்க மாநிலம் குமார்துலியில் உள்ள கங்கை நதிக்கரை அருகே சூட்கேஸ் உடன் சந்தேகப்படும்படியாக 2 பெண்கள் உலா வந்தனர். இதனை பார்த்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது ரத்தக்கரையோடு ஒரு பெண்ணின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. பால்குனி கோஷ் என்பவர் தனது கணவரை பிரிந்து தாய் ஆர்த்தி கோஷ் வீட்டில் வசித்து வந்தார்.  இந்த நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பால்குனி கோஷின் மாமனாரின் சகோதரி சுமிதா கோஷ் என்பவரும் கணவரைப் பிரிந்து பால்குனி கோஷுடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை பால்குனி கோஷுக்கும் சுமிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் கோபமடைந்த பால்குனி செங்கலால் சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சுமிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு தாயும், மகளும் இணைந்து சுமிதாவின் உடலை சூட்கேஸில் வைத்து கங்கை நதியில் அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது போலீசிடம் கையும் களவுமாக சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து சுமிதாவின் உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.