நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா இருக்கிறது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த வழக்கில் இதுவரை பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட  நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் பாதுகாவலருக்கு இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ‌ அதாவது வீர பெருமாள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். மேலும் கோடநாடு வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் கனகராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்த வருகிற 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று வீர பெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.