மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பசந்தி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிமல் மொண்டால் என்பவர் தனது மைத்துனி சதி மொண்டாலை கூரிய ஆயுதம் மூலம் தலை துண்டித்து கொன்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தலையை ஒரு கையில், கூர்மையான ஆயுதத்தை மற்றொரு கையில் வைத்துக்கொண்டு, ரத்தக்கறைகளுடன் வீதிகளில் உலா வந்தார். இந்த பயங்கரமான காட்சிகளை சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

சில நேரம் வீதியில் அலைந்த பின், நேராக பசந்தி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். அவரிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  போலீசார் கூறுவதாவது, “அவர் எந்தவித அச்சமோ, வருத்தமோ இல்லாமல் கையில் தலையுடன் வந்துள்ளார் என கூறியுள்ளனர்.

பிமல் மொண்டால், வீதிகளில் அலையும்போது, தனது மைத்துனி, அவரது கணவரை குறிப்பிட்டு “பல ஆண்டுகளாக என் மீது நடந்த அநியாயத்திற்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளேன்!” என கூச்சலிட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார்  நடத்திய விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளாக இந்த நபருக்கும், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையே தகராறு இருந்தது தெரியவந்தது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பிமல் மொண்டாலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.