
திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன்(49) என்ற நபர் செல்போன் மூலமாக ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெகதீசன் கூறியதாவது, ஆன்லைனில் சூதாட்டம் நடத்தி ஒவ்வொரு பாய்ண்ட்ஸ்க்கு ஏற்ப 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பெற்று வந்ததாக கூறினார் .
அந்த பணத்தினை ஜி.பே மூலமாக பெற்று வந்துள்ளார். சூதாட்டத்தில் முதல் முறை பணம் செலுத்தும்போது வெற்றி பெறுவது போல செட் செய்து விட்டு மீண்டும் அதிக தொகை செலுத்தும் போது தோல்வி அடைவது போல மாற்றங்கள் செய்துள்ளார். இதுவரை 1500 பாய்ண்ட்ஸ்களுக்கு மேல் விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகதீசனை கைது செய்து அவரிடம் இருந்த 4 செல்போன்கள், மணிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.